பள்ளி மாணவர்கள் காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஊட்டச்சத்து உணவு விழா கும்மிடிப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்கள் நொறுக்குத் தீனிகளை அதிகமாக உண்பதைத் தவிர்த்து, அவர்கள் ஊட்டச் சத்தான உணவு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் ஊட்டச்சத்து உணவு தின விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன் முன்னிலை வகித்தார். முதல்வர் சுகாதா தாஸ் வரவேற்றார்.
தொடர்ந்து, சத்தான உணவு பொருள்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அப்போது, மாணவர்களுக்கு காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்பதால் கிடைக்கும் ஊட்டச் சத்துகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் நொறுக்குத் தீனி உண்பதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்ததோடு, கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகமாக உண்பதால் மாணவர்களின் உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும், கல்விக்கும் உறுதுணையாக அமையும் என்று தெரிவித்தனர்.