செங்குன்றத்தில் பிரபல ரவுடி கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராகுல் (22) . இவர்மீது செங்குன்றம், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் பல உள்ளன. இவரை நீண்ட நாளாக போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் வந்த ஜோதிநகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்த கணேசனை (19) வழிமறித்த ராகுல், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரொக்கப்பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கணேசன் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து, பாடியநல்லூர் அங்காளீஸ்வரி கோயில் மைதானம் அருகே பதுங்கியிருந்த ராகுலை சனிக்கிழமை கைது செய்தார். தொடர்ந்து, அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.