திருத்தணி அருகே பொன்பாடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 747 பயனாளிகளுக்கு ரூ.96 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்.
திருத்தணியை அடுத்துள்ள பொன்பாடி மேட்டுக்காலனியில் வருவாய்த் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் பவணந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், அரக்கோணம் எம்.பி. கோ. அரி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து, 300 க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து 747 பயனாளிகளுக்கு ரூ.96 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்.
இந்த முகாமில், அனைத்துத் துறையினர் சார்பில் கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாரிகள் தங்களது துறையில் உள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
நிகழ்ச்சியில், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், முன்னாள் திருத்தணி நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரூபன் சக்கரவர்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மைத் கல்வி அலுவலர் தா. ராஜேந்திரன், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.