விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சேகர் திங்கள்கிழமை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தன. இதையெடுத்து போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கபடி, கோகோ, வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள் எம்.சுரேஷ், பொருளாளர் குமரவேலு ஆகியோர்
முன்னிலை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் ஜெயசந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சேகர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அவரும், காவல் ஆய்வாளர் விநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள் எம்.சுரேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இக்கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் சக்கரபாணி, உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வர்ராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.