திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாஜக அரசின் ரஃபேல் போர் விமான ஊழல் புகார் குறித்து கண்டனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் காமராஜ் சிலை அருகே நடைபெற்ற கண்டனப் பேரணிக்கு மாவட்டத் தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், பி.ஜேம்ஸ், எஸ்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டி.ஜெயகுமார் தலைமை வகித்து கண்டனப் பேரணியை தொடங்கி வைத்தார்.
அப்போது, ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாகவும், மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸார் கோஷம் எழுப்பியபடியே பேரணியாகச் சென்றனர்.
இப்பேரணி காமராஜர் சிலை அருகே தொடங்கி, பேருந்து நிலையம், தேரடி, ஈஸ்வரன் கோயில், பஜார்வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, எம்.ஜி.ஆர். சிலை அருகே
நிறைவடைந்தது.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கீழானூர் சுந்தர், அக்கட்சியின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் நாசே ஆர்.ராஜேஷ், விவசாயப் பிரிவு தலைவர் தவன்குமார், எஸ்.சி., எஸ்.டி. மாவட்டத் தலைவர் இமயா கக்கன், உறுப்பினர்கள் சுதா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.