பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

செங்குன்றம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

செங்குன்றம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 செங்குன்றத்தை அடுத்த தீயம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (58). இவர், கண்ணம்பாளையத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நள்ளிரவு 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பும்படி, ராஜாவைக் கட்டாயப்படுத்தி கேட்டுக் கொண்டனராம். இதையடுத்து, பெட்ரோல் நிரப்பிவிட்டு, அவர்களிடம் ராஜா பணம் கேட்டுள்ளார்.
 ஆனால், அந்த 3 பேரும் பணம் கொடுக்காமல் ராஜாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், சம்பவ இடத்துக்குச் சென்று பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினார். இதில், செங்குன்றம், சிருங்காவூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கோபிநாத் (19), பிரவீண்குமார் (19), கதிர்(19) ஆகிய 3 பேர் ராஜாவைத் தாக்கிய விடியோ காட்சிகள் மூலம் உறுதியானது.
 இதையடுத்து, செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் பலராமன் வழக்குப் பதிந்து, அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com