திருவள்ளூர் அருகே மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே இரவு நேரங்களில் ஏரி வரத்துக் கால்வாயில் இருந்து மணல் கடத்திச் செல்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பந்தப்பட்ட போலீஸார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் கிராமிய சார்பு ஆய்வாளர் சுதாகர் தலைமையில் திருவள்ளூர்-கடம்பத்தூர் சாலையில் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது, திருப்பாச்சூர் ஏரியில் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், காவல் துறை வாகனத்தைப் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில், திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட், காரணி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அஜித் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, இருவர் மீதும் திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களைக் கைது செய்தனர். பின்னர், மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.