திருத்தணி முருகன் கோயில் உண்டியலில், 43 நாள்களில் பக்தர்கள் ரூ.48.93 லட்சம் ரொக்கத்தையும், 210 கிராம் தங்கத்தையும் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
இக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். அதன்பின், காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கோயிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.
கடந்த மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை வழிபட்டு சென்றனர்.
இந்நிலையில் கடந்த 43 நாள்களில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள், கோயில் தக்கார் வே.ஜெய்சங்கர், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் கடந்த 2 நாள்களாக கோயில் ஊழியர்களால் எண்ணப்பட்டன. அப்போது ரூ. 48 லட்சத்து, 93 ஆயிரத்து, 185 ரொக்கம், 210 கிராம் தங்கம், 15,206 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.