திருவள்ளூரில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியினர் இருசக்கர வாகனங்களில் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் கடந்த 3 வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பிரசாரத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அமமுகவினர் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அமமுக சார்பில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பொன்.ராஜாவும், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளராக டி.ஏ.ஏழுமலையும் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை மாலையில் திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அமமுக ஆதரவாளர்கள் மேளதாளத்துடன், இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.