மூடப்பட்ட மதுக் கடை ஊழியர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப உடனே மாற்றுப் பணி வழங்க வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே பெரியகுப்பம் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.விஜயன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இளநிலை உதவியாளர் தேர்வை காலதாமதம் செய்யாமல் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வில் பங்கேற்கும் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் வெளியிட வேண்டும். பணி நியமனத்தில் எக்காரணம் கொண்டும் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கக் கூடாது. மேலும், ஒவ்வொரு கடையின் சராசரி விற்பனை விவரம், தேவைப்படும் ஊழியர் எண்ணிக்கை, பணியமர்த்தப்படும் ஊழியர்களின் விவரங்களை மாவட்ட அலுவலக தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் நந்தகோபால், ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஜி.ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.