திருவள்ளூர் அருகே சாலையோர ஆலமரத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப்பேருந்து திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போளிவாக்கம் சத்திரம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஆலமரத்தின்மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஊத்துக்கோட்டை ஜோதி (36), கீழ்கொடையூர் தேன்மொழி (51), அதேப் பகுதியைச் சேர்ந்த மலர்கொடி(46), திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ்(30) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.