கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை பகுதியில் புதுமண தம்பதி வீட்டிலும், விவசாயி வீட்டிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் 50 சவரன் நகைகள் உள்பட பணத்தை திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி(34). இவர் பண்பாக்கத்தில் உள்ள ஐடிஐ ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆனந்திலட்சுமி என்பவருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த வாரம் புதுமணத் தம்பதியர் கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டிக்கண்டிகை பகுதியில் வாடகை வீட்டிற்கு குடி வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை ராஜி, அவரது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு புதன்கிழமை காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 35 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி, 3 புதிய பட்டுப்புடவைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபகுதியை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம்(61) குடும்பத்துடன் சென்னை அம்பத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்று விட்டு, புதன்கிழமை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 15 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.