திருவள்ளூர் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே சிறுவனூர் தனியார் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறுவனத் தலைவர் டில்லிபாபு வரவேற்றார்.
வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அபுபக்கர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பிரதாப் ராவ் திருப்பாச்சூரில் வேளாண் இடுபொருள் விற்பனை மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசியது: கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் தரமான விதைகள், பூச்சிக் கொல்லிகள், உரங்கள் ஆகியவைகள் விற்பனை செய்யப்படும்.
மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை இந்த நிறுவனம் மூலம் கொள்முதல் செய்வது, சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்டு, கூடுதல் லாபத்தில் விற்பனை செய்யவும் முடியும் என்றார். கூட்டத்தில் வேளாண்மை அலுவலர்கள் ஆர்.செண்பகவள்ளி, க.அமுதா, வட்டார வேளாண் அலுவலர்கள் டி.ஏழுமலை, எஸ்.பி.இலக்கியபாரதி உள்பட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் எம்.மகேஷ் நன்றி கூறினார். கூட்டத்தில் பூண்டி, திருவாலங்காடு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.