திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் சிவ-விஷ்ணு மற்றும் ஜலநாராயணி தாயார் சமேத ஜலநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற 108 திருவிளக்குப் பூஜையில் பச்சை ஆடை அணிந்து பெண்கள் பங்கேற்றனர்.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 5-ஆவது வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கமாகும். அந்த வகையில் இக்கோயில் வளாகத்தில் ஆடி 5-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
இதில் பெண்கள் பச்சை நிற ஆடையணிந்து 108 திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டனர். மழை பெய்ய வேண்டி பூஜை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பூங்குழலி அம்பிகை மற்றும் பத்மாவதி தாயாருக்கு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிளக்குப் பூஜையில் ராஜாஜிபுரம், காமராஜபுரம், பெரியகுப்பம், பூங்காநகர், திருவள்ளூர், காக்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.