மாற்றுத்திறனாளிகள் வயது தளர்வு மற்றும் மாற்றுத்திறன் சதவீதம் தளர்வுக்கான சிறப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகைக்கான ஆணைகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வழங்கினார்.
திருவள்ளுர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு மற்றும் மாற்றுத்திறன் சதவீதத் தளர்வுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
வயது வரம்பு தளர்த்துதல் மற்றும் ஊனத்தின் சதவிகிதம் தளர்த்துதல் முகாமில் மாதாந்திர உதவித்தொகைக் கோரி 26 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் அளித்த மனுவை, தேர்வுக்குழு உறுப்பினர்களான அரசு எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் பரிசீலித்து பயனாளிகளைத் தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் 4 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை ஆட்சியரால் வழங்கப்பட்டது.
தசைச் சிதைவுநோய் அல்லது தண்டுவட பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6 பேர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் கோரி விண்ணப்பித்திருந்தனர். இதில் விண்ணப்பித்த 6 பயனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளை தேர்வுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்து அவர்களுக்கும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் த.ரத்னா, வட்டாட்சியர் சீனிவாசன், துணை வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.