செங்குன்றம் பகுதியில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.
செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகர் 20-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (33). இவருக்கு சொந்தமான காரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக செங்குன்றம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜவஹர்பீட்டர் மற்றும் காவல்துறையினர் மோகன்ராஜ் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, காரின் பின்பகுதியில் செம்மரக் கட்டைகள் மறைத்து வைத்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, செம்மரக் கட்டைகளையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மோகன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இதுபற்றி மாதர்பாக்கம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் வனத்துறையினரிடம் செம்மரக் கட்டைகளையும், காரையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ. ஒரு கோடி என வனத்துறையினர் தெரிவித்தனர்.