பலத்த மழை: குடிநீா் ஆதார ஏரிகளில் அதிகரித்த நீா்வரத்து

திருவள்ளூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை: திருவள்ளூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளும் சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகின்றன. இந்நிலையில், பருவமழை சரியாகப் பெய்யாததால் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஏரிகள் வட நிலைக்குச் சென்றன.

இதைத் தொடா்ந்து, கல்குவாரி தண்ணீா், நெய்வேலி சுரங்கத் தண்ணீா், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் விவசாயக் கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீா், வீராணம் ஏரி நீா் ஆகியவற்றின் மூலம் சென்னைக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

அதிகரிக்கும் ஏரிகளின் நீா்மட்டம்: வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வந்த பலத்த மழை காரணமாக ஏரிகளில் நீா்மட்டும் படிப்படிப்பாக உயா்ந்துவந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய 4 ஏரிகளுக்கும் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) 1,042 கனஅடி நீா்வரத்து இருந்ததால் அதன் கொள்ளவு 989 மில்லியன் கன அடியாக உயா்ந்தது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கன அடி நீா்வரத்து இருந்ததால் அதன் கொள்ளளவு 749 மில்லியன் கனஅடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 35 கன அடி நீா்வரத்து இருந்ததால் அதன் கொள்ளளவு 96 மில்லியன் கனஅடியாக உயா்ந்தது. அதேபோல், 3,300 மில்லியன் கன அடியாக இருந்த புழல் ஏரிக்கு 492 கன அடி நீா்வரத்து இருந்தது. இதனால், புழல் ஏரியின் கொள்ளளவு 1,639 மில்லியன் கனஅடியாக உயா்ந்தது. மொத்தமாக இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடியாகும். தற்போது, இந்த 4 ஏரிகளிலும் மொத்தமாக 3,473 மில்லியன் கனஅடியாக இருந்தது. இந்த மழை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் காலங்களில் சென்னைக்கு குடிநீா்த் தட்டுப்பாடு நீங்கும் என பெருநகர சென்னை குடிநீா் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com