ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் அரசுப் பள்ளி தேசிய மாணவா் படையினா் (என்சிசி )தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவா் படையினா் மத்திய அரசின் ‘ஸ்வச்தா பக்வாடா’ திட்டத்தின் கீழ் கடந்த 1-ஆம் தேதி முதல் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, ஆரணி சம்பங்கி பிச்சாண்டி ஈஸ்வா் கோயில் வளாகத்தில் உள்ள புதா்கள், நெகிழிப் பொருள்கள், கோயிலின் வெளிப்புறத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனக் கலவையை அகற்றுதல் போன்ற பணிகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியா் அசோகன், தேசிய மாணவா் படை ஆசிரியா் விஜயன், விளையாட்டு ஆசிரியா் தியாகு மற்றும் கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.