கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட திடீர் ஆய்வில், தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.கனகராஜ் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மளிகைக் கடைகள், உணவு விடுதிகள், சாலையோரக் கடைகளில் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 கடைகளில் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைகளுக்கு ரூ. 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், கும்மிடிப்பூண்டி சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.