மீஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து, தலையில் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
மீஞ்சூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே உள்ள கிணற்றில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக நகர காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று கிணற்றில், தலையில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்த இளைஞர் மீஞ்சூர் அண்ணா தெருவில் வசித்து வந்த லட்சுமணன்(27) என்பது தெரிய வந்தது. அவர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்ததும், கடந்த 10-ஆம் தேதி மீஞ்சூரில் நடைபெற்ற நண்பரின் மகள் திருமணத்துக்கு செல்வதாக வீட்டில் தகவல் கூறி விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. அதன் பின் அவர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். லட்சுமணனை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி விட்டுச் சென்றனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.