கும்மிடிப்பூண்டி அரருகே மனைவியைத் தாக்கிய கணவரை ஆரம்பாக்கம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கணபதி நகரைச் சேர்ந்தவர் ஷகிரா பானு (23). அவரது கணவர் உமர் அலி ஃபாரூக். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. உமர் அலி
ஃபாரூக் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உமர் அலி ஃபாரூக் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் ஷகிரா பானுவிடம் தகராறு செய்தார். அவரை தகாத வார்த்தையால் பேசி அவரது முகத்தில் குத்தினார். இதில் ஷகிரா பானுவின் வாயில் இருந்த 5 பற்கள் உடைந்தன. அவரைக் கொலை செய்து விடுவதாகவும் உமல் அலி மிரட்டினார்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிய ஷகிரா பானு, சென்னை ராயபுரத்தில் உள்ள தனது மூத்த சகோதரர் அமானுல்லாவின் வீட்டுக்குச் சென்றார். கணவர் தன்னைத் தாக்கியது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஷகிரா பானு செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் உமர் அலி ஃபாரூக்கை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.