திருவள்ளூர் அருகே மாணவிகளைக் கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியரைத் தாக்கி காயப்படுத்திய 4 பேரை கடம்பத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டது: திருவள்ளூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரமானந்தம்(48). அவர் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளி விட்டுச் சென்ற மாணவிகளை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் அந்த வழியாக வந்த ஆசிரியர் பரமானந்தத்திடம் தெரிவித்தனர். அந்த இளைஞர்களை அவர் தட்டிக் கேட்டதோடு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் எச்சரித்தார்.
இந்நிலையில், பரமானந்தம் சனிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக, கடம்பத்தூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 4 மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்து சராமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து காயமடைந்த பரமானந்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
இது தொடர்பாக அவர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், ஏகாட்டூரைச் சேர்ந்த கோடீஸ்வரன்(21), கடம்பத்தூரைச் சேர்ந்த சுபாஷ்(18), மோகன்ராஜ்(19), ஆகாஷ்(18) ஆகிய 4 பேர்தான் ஆசிரியரைத் தாக்கினர் என்பது தெரிய வந்தது. அந்த 4 பேரையும் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.