திருவள்ளூர் அருகே டிராக்டரில் ஏரி மண் கடத்தியதாக 3 பேரை மப்பேடு போலீஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் இரவு நேரங்களில் சிலர் சவ்வுடு மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னிக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் திருவள்ளூர்-மப்பேடு சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மப்பேடு போலீஸார் திடீர் ரோந்து சென்றனர்.
அப்போது, சத்தரை கிராம ஏரியில் மண் திருட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் போலீஸார் வாகனத்தைப் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். போலீஸார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த விஜி(21), கீழாச்சேரியைச் சேர்ந்த செல்வம்(50), அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன்(19) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.