பொன்னேரியில், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தும் நோக்கத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மாணவர்கள் சார்பில், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணி பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பேரணி, ஹரிஹரன் கடை வீதி, தேரடி சாலை, புதிய பேருந்து நிலையம், தாயுமான் செட்டி தெரு வழியாக சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வலியுறுத்தி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். அப்போது, சுற்றுச் சூழலை காக்க பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம் என கோஷம் எழுப்பினர்.