கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பேரூராட்சி அலுவலகத்திலும் சமத்துவப் பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாநிதி, ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும், பெண்கள் பட்டுப்புடவை அணிந்தும் பங்கேற்றனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் பொங்கல் வைத்தும், சூரியனுக்கு பழங்கள், பூ ஆகியவற்றைப்
படைத்தும் வழிபட்டனர்.
அதே போல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கலாதரன் தலைமையில், பதிவறை எழுத்தர் கருணாநிதி, இளநிலை உதவியாளர் நரேந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் கோபி உள்ளிட்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அலுவலக வாயிலில் பொங்கல் வைத்து வழிபட்டதுடன், பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினர்.
எடப்பாளையம் கிராமத்தில்...
எடப்பாளையம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பொங்கல் திருவிழாவில் அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் அலமாதி ஊராட்சியில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ சிறுணியம் பலராமன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், எடப்பாளையம் கிராம மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். உறியடி, பொங்கல் வைத்து வழிபடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.