பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்திய முனிவர் இங்குள்ள ஆனந்த புஷ்கரணியில் (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்கோயில் குளத்தில் உள்ள மீன்கள், அண்மைக்காலமாக இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதைத் தொடர்ந்து, பொன்னேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் குளத்தை தூய்மை செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறியது:
பொன்னேரி நகருக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கி வரும் இக்குளத்தை தூய்மை செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். குளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி, சுற்றுப்பகுதி கட்டமைப்புகளுக்கு வர்ணம் பூசும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றனர்.