அத்திமாஞ்சேரிப்பேட்டையில் திருவள்ளுவர் தினவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் இலக்கியமன்றம் சார்பில், அத்திமாஞ்சேரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், புதன்கிழமை காலை 10 மணிக்கு திருக்குறள் மாணவர் மாநாடு மற்றும் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.
ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோபால் தலைமை வகித்தார். ஆசிரியர் மாதவன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணப்பன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இவ்விழாவில் 50 மாணவர்கள் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றனர். ஆசிரியர் ச.ம.மாசிலாமணி நடுவராக இருந்து நடத்தினார்.
மாணவர் மாநாட்டில், நிறுவனத் தலைவர் பு.சு.ஆறுமுகம் (எ) குறளன்பனுக்கு "குறள் பரப்புச் செம்மல்' என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருதும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புலவர் பு.வே.முருகேசன், கவியன்பன், புவியரசு, முனுசாமி, உமாபதி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.