திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் பிப்.14-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் திருவள்ளூர் ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியரின் செய்திக் குறிப்பு: ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் குறித்து ஓய்வூதியதாரர்கள் முறையீட்டு மனுக்கள் இரண்டு நகல்கள் எடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வரும் 27-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
இந்த மனுவில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண், கோரிக்கை எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது போன்ற விவரங்கள் அந்த மனுவில் இடம்பெற வேண்டும்.
இம்முறையீடுகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும்.
கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் முறையீட்டுக்கான இடர்பாடுகளுக்கு முடிவு காணவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் இக்கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.