ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதலாம் காலாண்டு குழுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் நில எடுப்பு, இலவச வீட்டு மனைப் பட்டா, நிலம் அளந்து காட்டுதல், வீட்டு மனை மற்றும் மயான பூமிக்கான இடம் தேர்வு செய்து அளிக்க வேண்டும். அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருள்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் சேரும் வகையில், பழங்குடியின ஜாதிச் சான்றுகளை உடனடியாக விசாரணை செய்து வழங்குதல் உள்ளிட்டவற்றை குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கும் பொருள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். இதற்கான திட்ட செயலாக்கத்தை மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆணையம் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவலியுறுத்தினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அலுவல் சார்பு உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.