திருவள்ளூரில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முகாமில் 63 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான 12 காலியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முகாம் மணவாள நகரில் உள்ள கிரைஸ்ட் கிங் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம்முகாம் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், காலியிட விவரங்கள் அனைத்தும் இணையதள திரையில் வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதில், முற்பகலில் நடைபெற்ற நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் முகாமில் 17 பேர் கலந்து கொண்டனர். இணையதளம் மூலம் காலியிட விவரங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு காண்பிக்கப்பட்ட பின்னரே மாறுதல் கலந்தாய்வு மூலம் 12 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
அதேபோல், பிற்பகலில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முகாமில் 67 பேர் கலந்து கொண்டனர்.
இதில், 12 பேருக்கு மட்டும் பதவி உயர்வுக்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளன. ஆனால், இணையதள தடையால் இரவு வரை பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முகாமில் தலைமை ஆசிரியர்கள் காத்திருந்தனர்.
இக் கலந்தாய்வு முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.