புதுமாவிலங்கை பகுதியில் வெள்ளிக்கிழமை மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.
கடம்பத்தூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ராமன்(35). அவர் வெள்ளிக்கிழமை காலை தன் குடும்பத்துடன் திருவண்ணாமலையை அடுத்த படவேடு கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் கடம்பத்தூர் போலீஸார், பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் குடிசை வீட்டில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. மேலும், கட்டில், பீரோ மற்றும் துணிகள் தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதகுறித்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.