மீஞ்சூரில் வழக்குரைஞரைத் தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் வழக்குரைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குரைஞரைத் தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பொன்னேரி காவல் சரக, உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நேரில் சென்று, மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்குரைஞரைத் தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரிடம் வழக்குரைஞர்கள் வலியுறுத்தினர். இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கண்காணிப்பாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியல் காரணமாக, பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.