கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறை சார்பில் மாதர்பாக்கம்-பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத் துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் இளங்கோவன் உத்தரவின்பேரில் வியாழக்கிழமை இப்பேரணி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாதர்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் லோகேஷ், வட்டார சுகாதார புள்ளியியலாளர் அன்பரசி, மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் சம்பந்தம் முன்னிலை வகித்தனர்.
நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் தாய்-சேய் நலத்தின் பாதுகாப்பு தொடர்பாக உறுதிமொழியேற்றனர். பின்னர் குடும்ப நலத்துறை சார்பில் திட்டமிட்ட அளவான குடும்பத்தின் பொறுப்பு குறித்தும், மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்னைகள் குறித்தும் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் பேசினார்.
இதையடுத்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாதர்பாக்கம்-பாதிரிவேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது பாதிரிவேடு, மாதர்பாக்கம் பஜார் வீதி வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் திட்டமிட்ட குடும்பம் குறித்தும், மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவு குறித்தும் பதாகைகளை ஏந்தி, முழக்கம் எழுப்பியவாறு சென்றனர்.
பேரணி முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தனசேகர் நன்றி கூறினார். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினர் சான்றிதழ்களை வழங்கினர்.