கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி புதிதாக சார்-பதிவாளர் அலுவலகம் ரூ.84 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
சார்-பதிவாளர் அலுவலகம் கும்மிடிப்பூண்டி பஜாரில் வாடகைக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை கும்மிடிப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த 81 வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியினரும் பயன்படுத்தி வந்தனர்.
இதுநாள் வரை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த இந்த அலுவலகத்திற்கென கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி புதிய கட்டடம் கட்ட அரசு திட்டமிட்டது. இதற்கான பணிகளை ரூ.84 லட்சம் மதிப்பில் நிறைவேற்ற ஆணை பிறப்பித்தது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை போடப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதிய சார்-பதிவாளர் அலுவலக கட்டுமானப் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து முழு வீச்சில் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1,400 சதுர அடியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் கட்டப்பட உள்ளதாகவும், இந்தப் பணி 6 மாதத்தில் முடிவடையும் என்றும் ஒப்பந்ததாரர் டி.சி.மகேந்திரன் தெரிவித்தார். இந்தப் பணிகளை பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திர குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.