திருவள்ளூரை அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா பள்ளியில் விளையாட்டு தின விழா சனிக்கிழமை நிறைவு பெற்றதையொட்டி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பள்ளியில் விளையாட்டு தின விழா கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்தது. இவ்விழாவில் 8 பிரிவுகளாக 2,500 பள்ளி மாணவர்கள் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 13 வகையான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சேவாலயா பள்ளி ஆலோசகர் அமர்சந்த் ஜெயின் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சங்கரபாண்டியன் வரவேற்றார். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கிங்ஸ்டன், ஆனந்தன் முன்னிலை வகித்தனர். விழாவில் திருவள்ளூர் மாவட்ட கைப்பந்துக் கழக துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க கைப்பந்துக் கழக இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கீர்த்தனா, ஜெயகோபி உள்ளிட்ட சேவாலயா பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.