மழை நீர் சேகரிப்பு குறித்தும், நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அமைப்பினர் இப்பேரணியை நடத்த முடிவு செய்தனர். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு கொடியசைக்க பள்ளி வளாகத்திலிருந்து வியாழக்கிரழமை தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேரூராட்சியை அடைந்தது.
மழை நீர் சேகரிப்பு, நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திச் சென்றனர். இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் மாணவர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ், பேரூராட்சி ஊழியர்கள், தேசிய மாணவர் படைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.