திருத்தணி சரவணப்பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 -ஆம் நாள் தெப்ப உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையை வந்தடைந்தார். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், இரவு 7.30 மணிக்கு சங்கர் கணேஷ் மற்றும் பின்னணி பாடகி இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி ஆகியோரின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
3 நாள் தெப்பம் விழாவில், உற்சவர் 7 முறை குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப திருவிழாவைக்கான 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சரவணப்பொய்கையில் குவிந்தனர். அங்கு கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பூஜை செய்து வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் இரா. ஞானசேகர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.