திருவள்ளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஒரு வேனைப் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுர் அருகே பெரிய எடப்பாளையம் பகுதியில் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது, அந்தச் சாலை வழியாக வந்த ஒரு வேனில் இருந்தவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் திடீரென திரும்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீஸார் வேகமாகச் சென்று மடக்கி சோதனை செய்ததில் அந்த வேனில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.
வேனில் இருந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஏரி வரத்துக் கால்வாயில் இருந்து மணல் அள்ளி வருவதாகக் கூறினர். அவர்கள் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கலையரசன்(24), ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன்(34) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்ததோடு, வேனைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.