திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில், குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் பயன்பெறும் வகையில், வரும் 17-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் உள்பட குரூப் 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில், இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
வரும் 17-ஆம் தேதி முதல் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்- 044-27660250-இல் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.