வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் வரும் வகையில், வாரந்தோறும் சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். எனவே, மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.