கோயில் விழாவில் தாக்கப்பட்டவர் பலி: இருவர் கைது

ஆர்.கே.பேட்டையில் கோயில் விழாவில், ஏற்பட்ட தகராறில் தீக்காயம் அடைந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ஆர்.கே.பேட்டையில் கோயில் விழாவில், ஏற்பட்ட தகராறில் தீக்காயம் அடைந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டையை அடுத்த சிஜிஎன் கண்டிகை கிராமத்தில் கடந்த வாரம் கங்கையம்மன் ஜாத்திரை விழாவையொட்டி, நடைபெற்ற  அம்மன் வீதி உலாவில் அதே கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முனிரத்தினம் (56) ஒரு கையில் மண்ணெணெய் கேனுடன் மறு கையில் தீப்பந்தம் ஏந்திச் சென்றார்.
அப்போது முன்விரோதம் காரணமாக முனிரத்தினத்துடன் இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் முனிரத்தினத்தைப் பிடித்து தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். அப்போது மண்ணெண்ணெய் சிதறி உடல் முழுவதும் தீ பரவியதில் முனிரத்தினம் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் திங்கள்கிழமை இறந்தார்.  இதுகுறித்து கொலை வழக்குப் பதிந்த ஆர்.கே.பேட்டை போலீஸார், முனிரத்தினத்தைத் தாக்கிய அதே கிராமத்தைச் சேர்ந்த கிரி, வெங்கடேசன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com