தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வட்டி சலுகை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட இனங்களுக்கு வட்டி சலுகைக்கு வரும் 31.3.2020 வரை ஆணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மாத தவணைக்கான அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுவதும் தள்ளுபடி, நிலத்துக்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில், ஒவ்வோர் ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு அரசாணை (நிலை) எண்.174, நாள் 7.2.1991-இன்படி வட்டி தள்ளுபடி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு வட்டி தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஒதுக்கீடு பெற்று விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள ஒதுக்கீடுதாரர்கள், மேலே அறிவித்துள்ள வட்டி தள்ளுபடி சலுகையின்படி, நிலுவைத் தொகைகளைச் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றுப் பயனடையலாம்.