பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மிதமான மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பொன்னேரி பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
கடந்த நான்கு நாள்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபோதிலும், பொன்னேரி நகரில் மட்டும் மழை பெய்யவில்லை. அவ்வப்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்ய வில்லை.
இந்நிலையில், பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை 8 மணி வரை பெய்தது. மழை பொழிவதைக் கண்டு இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.