கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை ஒப்பந்ததாரரை ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரையைச் சேர்ந்தவர் மதன்குமார் (32). இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை இவர் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி புறவழிச் சாலையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக கும்மிடிப்பூண்டி பஜாருக்கு இவர் வந்தபோது, ஆட்டோவில் வந்த 4 பேர் மதன்குமாரின் இரு சக்கர வாகனத்தை சுரங்கப் பாதையில் மடக்கினர். பின்னர், மதன்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில், மதன்குமாரின் இரு கைகள், முதுகு, கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு பொதுமக்கள் கூடியதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மதன்குமாரை மீட்டு, கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.