திருத்தணி அருகே ஜாத்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
திருத்தணி ஒன்றியம், பி.சி.என். கண்டிகை கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்துக்கு சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்குவது மற்றும் சாலை ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களால், கடந்த 8 ஆண்டுகளாக ஜாத்திரை திருவிழா நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் ஜாத்திரை விழா நடத்த வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் விழா நடத்தக்கூடாது என்றும் கூறி வந்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பவணந்தி தலைமையில், இரு தரப்பினர் இடையே சமரசப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
ஒரு தரப்பினர் சுடுகாடு மற்றும் சாலை வசதி போன்றவற்றை ஏற்படுத்தும் வரை விழா நடத்த அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக மீண்டும் ஒரு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கோட்டாட்சியர் அறிவித்தார்.
நிகழ்ச்சியில், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், போலீஸார் கலந்து கொண்டனர்.