தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திங்கள்கிழமை இரவு திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் நாள்தோறும் ரூ.5 லட்சம் வரையில் வசூலாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளர் மோகன்ராஜ். திங்கள்கிழமை மாலை பணிகளை முடித்து விட்டு, அலுவலகத்தை பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நிதி நிதி நிறுவனத்துக்கு வந்தபோது, இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனே அவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பணம் வைக்கப்பட்டுள்ள இரும்பு லாக்கரை மர்ம நபர்கள் உடைக்க முயற்சித்திருந்ததும், உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றதும் தெரியவந்தது.
மேலும், இந்த நிதி நிறுவனத்தில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியாததால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது.