திருத்தணி நகராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 15 முக்கிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருத்தணி நகராட்சியின், 21 வார்டுகளில் அனைத்தும் சிமெண்ட் மற்றும் தார்ச்சாலைகளாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாற்றப்பட்டது. இந்நிலையில், சாலைகளை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
குறிப்பாக, காந்தி நகர், நல்ல தண்ணீர் குளக்கரை, முருகப்பா நகர், என்.எஸ்.சி.போஸ் சாலை ஆகிய சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, திருத்தணி நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட முக்கிய சாலைகள் தற்போது சீரமைத்து புதிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது துரிதகதியில் நடந்து வருகிறது. இப்பணிகள் முழுவதும் அடுத்த மாதத்தில் முடிவடைந்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.