சோழவரம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சென்னை, கொடுங்கையூர் எம்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (63). சென்னை துறைமுகத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், திங்கள்கிழமை பெரியபாளையம் அருகே ஏனாம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலங்களைப் பார்வையிட்டு விட்டு, மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோழவரத்தை அடுத்த வண்டி பண்டிகாவனூர், மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சென்ற சோழவரம் போலீஸார், சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.