சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது. தப்பிச் சென்ற அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி ஓர் அரசுப் பேருந்து (தடம் எண் 201) ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. மாலை 5 மணிக்கு திருவள்ளூரை அடுத்த புதூர் கிராமம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அந்தப் பேருந்தின் மீது கற்களை வீசித் தாக்கினர்.
இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனிடையே, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி மற்றொரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. கனகம்மாசத்திரம் அருகே உள்ள நாராயணபுரம் கூட்டுச்சாலையில் சென்றபோது அதே மர்ம நபர்கள் இந்தப் பேருந்தின் மீதும் கல் வீசி கண்ணாடியை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தைவிட்டு கீழே இறங்கினர்.
இதுகுறித்த தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்தைப் பார்வையிட்டனர்.
பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். கண்ணாடியை உடைத்து விட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.