கட்சிகளின் சமூக வலைதளப் பிரசாரம் ஊடகக் குழு மூலம் கண்காணிக்கப்படும்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பிரசாரம் மற்றும் விளம்பரம் செய்வதை ஊடக மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
கட்சிகளின் சமூக வலைதளப் பிரசாரம் ஊடகக் குழு மூலம் கண்காணிக்கப்படும்


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பிரசாரம் மற்றும் விளம்பரம் செய்வதை ஊடக மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்  தெரிவித்தார். 
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதை கண்காணிப்பதற்காக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ர.பன்னீர்செல்வம், அகில இந்திய வானொலி நிலைய அலுவலர் எ.கே.தனசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகமது ரசூல், கூடுதல் மாவட்ட தகவல் அலுவலர் ரங்கநாதன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமார் கூறியது:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கேபிள் மூலம் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதைக் கண்காணிப்பதற்காக ஊடகச் சான்று மற்றும் கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இக்குழுவினரிடம் அங்கீகாரம் பெற்ற கட்சியின் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு முடிவு செய்த 3 நாள்களுக்கு முன்பாகவும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றம் இதர வேட்பாளர்கள் 7 நாள்களுக்கு முன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு நாள்களுக்குள் அனுமதிச் சான்று வழங்கப்படும்.
அப்போது, விளம்பரம் செய்யப்பட உள்ள விளம்பரப் படத்தின் மின்னணு வடிவில் தமிழாக்கம் செய்த இரு நகல்கள் மற்றும் விளம்பரம் தயார் செய்வதற்கான செலவு விவரம், தொலைக்காட்சி சேனல் மற்றும் கேபிள் ஒளிபரப்பு ஆகியவற்றில் விளம்பரம் செய்வதற்கான நேரம், கட்டணம் ஆகியவற்றை வகை வாரியாக தெரிவிக்க வேண்டும்.
இந்த விளம்பரத்தின் மூலம் வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் குறித்து வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும். 
வாக்குப்பதிவு தினம் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் நாளிதழ் விளம்பரம் செய்வதற்கு இக்குழுவினரின் அனுமதி பெற வேண்டும். 
மேலும், அனுமதி பெறாமல் செய்யப்படும் விளம்பரங்கள் இக்குழுவினருக்கு தெரிய வரும் பட்சத்தில் மேற்படி ஒளிபரப்பு நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com